தில்லியில் கரோனா தடுப்பூசி போடும் நேரம் நீட்டிக்கப்படுவதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை ஏற்பட்டுள்ள சூழலில், தில்லியிலும் நாள்தோறும் 500க்கும் அதிகமானோருக்கு கரோனா கண்டறியப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தில்லி முதல்வர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது,
கரோனா தடுப்பூசி செலுத்த தகுதியான அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். 30,000 முதல் 40,000 பேருக்கு நாள்தோறும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இன்னும் சில நாள்களில் அதை 1.5 லட்சமாக உயர்த்தவுள்ளோம்.
தற்போது 500 மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. அதை 1000 மையங்களாக உயர்த்தவுள்ளோம். அனைத்து அரசு மையங்களிலும் கரோனா தடுப்பூசி போடும் நேரம் காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணிவரை நீட்டிக்கப்படுகிறது. இதன்மூலம் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியும்.
முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுவதை அனைவரும் உறுதி செய்யவேண்டும்.
கரோனா தடுப்பூசி தயாரிப்பு அதிகரித்துள்ளதால், அதிக அளவிலான தடுப்பூசிகளை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.