கரோனாவுக்கு எதிரான போரில் பத்திரிகையாளர்களும் முன்களப் பணியாளர்கள் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
கடந்த 2020 தொடக்கத்தில் கரோனா பரவத் தொடங்கிய காலத்திலிருந்து பத்திரிகையாளர்கள் தொடர்ந்து தங்கள் பணியை மேற்கொண்டு வருகின்றனர். கரோனா ஊரடங்கு காலத்திலும் அவர்களது பணி இடைவிடாமல் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. நாடு முழுவதும் பத்திரிகையாளர்கள் பலரும் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் சுகாதாரப் பணியாளர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் மட்டுமே கரோனா போர்வீரர்களாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்துள்ளார்.
இதற்கு முன்பாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், பிகார் முதல்வர் நிதீஷ்குமார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலின் ஆகியோர் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்துள்ளனர்.