ஜூன் முதல் ரேஷன் கடையில் டோக்கன் முறையில் பொருள்கள்
கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், ஜூன் மாதம் முதல் நியாய விலைக் கடையில் டோக்கன் முறையில் பொருள்களை விநியோகம் செய்யவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், ஜூன் மாதம் முதல் நியாய விலைக் கடையில் டோக்கன் முறையில் பொருள்களை விநியோகம் செய்யவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில்,
தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து தற்போது கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ள கரோனா நோய் பரவலை கருத்தில் கொண்டும் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் பரிந்துரைத்துள்ள ஒரு சில கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டும் கரோனா நோய் பரவல் சங்கிலியை உடைத்து பரவலை உடனடியாக தடுக்கும் பொருட்டு 07.06.2021 முடிய அதிக தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஆணையிடப்பட்டு செயலாக்கத்தில் உள்ளது.
இருப்பினும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தொடர்ந்து இன்றியமையாப் பண்டங்கள் மற்றும் கரோனா நிவாரணத் தொகை உள்ளிட்ட அதீத மானியத்துடன் கூடிய நல உதவிகள் தொடர்ந்து பெறும் வண்ணம் நியாய விலைக் கடைகள் தினந்தோறும் காலை 08.00 மணி முதல் நண்பகல் 12.00 வரை செயல்பட அனுமதித்து செயல்பாட்டில் உள்ளது.
கரோனா நோய் பரவலை தடுக்கும் வண்ணம் ஏற்கனவே முந்தைய மாதங்களில் கடைபிடித்தது போலவே ஜுன் 2021 மாத பொது விநியோகத் திட்ட செயல்பாட்டினையும் பாதுகாப்புடன் சுழற்சி முறையில் மேற்கொள்ள நாள் ஒன்றுக்கு 200 குடும்ப அட்டைகளுக்கு மிகா வண்ணம் டோக்கன்கள் வழங்கி விநியோகத்தினை பாதுகாப்புடன் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 01.06.2021 முதல் 04.06.2021 முடிய 4 தினங்களுக்கு நியாயவிலைக் கடைப் பணியாளர்கள் குடும்ப அட்டைதாரர்களின் இல்லங்களுக்கு சென்று அவர்தம் பொருட்கள் பெறுவதற்கு
நிர்ணயிக்கப்பட்டுள்ள நாள் மற்றும் நேரம் குறிக்கப்பட்டுள்ள டோக்கன்களை விநியோகம் செய்வார்கள். அந்த டோக்கன்களில் குறிப்பிடப்பட்டநாள் / நேரத்தில் அட்டைதாரர்கள் அவர்தம் நியாய விலைக் கடைகளுக்கு சென்று அவருக்குண்டான கரோனா நிவாரண கூடுதல் அரிசி உள்ளிட்ட இன்றியமையாப் பண்டங்களை ( துவரம் பருப்பு ) பெற்றுச் செல்ல வேண்டும்.
டோக்கன்கள் அடிப்படையில் ஜுன் 2021 மாதத்திற்கான விநியோகம் 05.06.2021 சனிக்கிழமை முதல் நியாய விலைக் கடைகளில் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது. நிர்வாக காரணங்களினால் துவரம் பருப்பு மட்டும் 07.06.2021 முதல் நியாயவிலைக் கடைகளில் விநியோகம் செய்யப்படும். அட்டைதாரர்கள் உரிய கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றியும் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியினை பின்பற்றியும் தங்களையும் சமூகத்தையும் நோய்தொற்று அபாயத்திலிருந்து காத்துக் கொள்ளவும் நோய்தொற்று சங்கிலியினை உடைத்திடவும் உதவும் படிகேட்டுக் கொள்ளப்படுகிறது.