மன்னார்குடி நகர்மன்றத் தலைவராக திமுகவை சேர்ந்த மன்னை த.சோழராஜன் போட்டியின்றி தேர்வு
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகர்மன்றத் தலைவராக திமுகவை சேர்ந்த மன்னை த.சோழராஜன் வெள்ளிக்கிழமை போட்டியின்றி ஏகமனதாக தேர்வு பெற்று பதவியேற்றார்.
மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகர்மன்றத் தலைவராக திமுகவை சேர்ந்த மன்னை த.சோழராஜன் வெள்ளிக்கிழமை போட்டியின்றி ஏகமனதாக தேர்வு பெற்று பதவியேற்றார்.
மன்னார்குடி நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டு உறுப்பினர் பதவிக்கு நடைபெற்றற தேர்தலில், திமுக 26, அதிமுக 4, அமமுக 2, சுயேச்சை 1 என வெற்றி பெற்றறனர். பின்னர், சுயேச்சை உறுப்பினர் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்தார். இதனால் திமுகவின் பலம் 27 ஆக உயர்ந்தது.
இந்நிலையில், திமுக தலைமை வியாழக்கிழமை அறிவித்த பட்டியலில், மன்னார்குடி நகர்மன்றத் தலைவருக்கு கட்சியின் வேட்பாளராக சூ. மீனாட்சியின் பெயர் இடம்பெற்றது. இதனால், மன்னார்குடி திமுகவினரிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டது. இதில், கட்சியின் மாவட்டக் கழகம் தலையிட்டு சமாதானம் பேசியதில் உடன்பாடு எட்டப்படவில்லை.
திமுக தலைமை, நகர்மன்றத் தலைவருக்கான அறிவித்துள்ள வேட்பாளரை மாற்றிவிட்டு அதற்கு பதிலாக மன்னை த.சோழராஜன் பெயரை அறிவிக்காவிட்டால் வெள்ளிக்கிழமை நடைபெறும் ரகசிய வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தேர்தலை புறக்கணிப்பு செய்வது என தெரிவித்தனர்.
பின்னர், நகர்மன்ற திமுக உறுப்பினர்கள் 26 பேரையும் தனி வேனில் ஏற்றி பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இந்நிலையில், வியாழக்கிழமை இரவு, திமுக தலைமை புதிதாக அறிவித்த பட்டியலில் மன்னார்குடி நகர்மன்றத் தலைவர் வேட்பாளராக மன்னை த.சோழராஜன் பெயர் இடம்பெற்றது.
இதனையடுத்து, மன்னார்குடி நகராட்சி அலுலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் பங்கேற்ற 26 திமுக உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். இதேபோல், அமமுகவை சேர்ந்த 2 உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
ஏற்கனவே தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திமுகவை சேர்ந்த எஸ்.மீனாட்சி மட்டும் கலந்துகொள்ளவில்லை.
தலைவர் தேர்தலுக்கு திமுக வேட்பாளரை தவிர மற்ற யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யாததால் மன்னை த.சோழராஜன் போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்படுவதாக, தேர்தல் நடத்தும் அலுவலரும் நகராட்சி ஆணையருமான கே.சென்னுகிருஷ்ணன் அறிவிப்பு செய்தார். பின்னர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழ் வழங்கினார். தொடர்ந்து மன்னை த.சோழராஜனை நகர்மன்றத் தலைவருக்கான இருக்கையில் அமரவைக்கப்பட்டார்.
அவருக்கு நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், திமுக நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
நகர்மன்ற துணைத் தலைவருக்கான மறைமுகத் தேர்தல் மதியம் 2 மணிக்கு நடைபெறும் என தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார்.