திருவாரூர்: திருவாரூர் நகர்மன்றத் தலைவர் வேட்பாளராக திமுகவைச் சேர்ந்த எஸ். புவனபிரியா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
திருவாரூர் நகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 30 வார்டுகளில் 23 வார்டுகளில் திமுகவும், 1 வார்டில் காங்கிரஸும், 3 வார்டில் அதிமுகவும், 2 வார்டில் மனிதநேய மக்கள் கட்சியும் வெற்றி பெற்றிருந்தன. இதில் ஒரு அதிமுக வேட்பாளர் தவிர, 29 வேட்பாளர்கள் பதவியேற்றிருந்தனர்.
இந்நிலையில், நகராட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திமுக சார்பில் 9-வது வார்டில் வெற்றி பெற்றிருந்த எஸ். புவனபிரியா, தனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலரும், நகராட்சி ஆணையருமான பிரபாகரனிடம் தாக்கல் செய்தார்.
தலைவர் பதவிக்கு வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதைத்தொடர்ந்து, எஸ். புவனபிரியா போட்டியின்றி தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவர் தலைவர் இருக்கையில் அமர வைக்கப்பட்டார். அவருக்கு அதிமுக உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
நகர்மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புவனபிரியாவின் கணவர் ஏற்கனவே நகராட்சி துணைத் தலைவராக இருந்துள்ளார். தற்போது 14-வது வார்டு உறுப்பினராக தேர்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.