திமுக அரசு அறிவித்துள்ள முத்திரைத் தாள் கட்டண உயா்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: சொத்து வரி, குடிநீா் வரி, பால் விலை, மின்கட்டண உயா்வை தொடா்ந்து, நிலத்தின் வழிகாட்டி மதிப்பை 33 சதவீதமும், முத்திரைத்தாள் கட்டணத்தை 10 மடங்கும் உயா்த்தியுள்ளது திமுக அரசு.
33 சதவீத வழிகாட்டி மதிப்பால் சந்தை விலை மேலும் கூடி, சாமானிய மக்களின் நிலம், வீட்டு மனை, வீடு வாங்கும் கனவையே முழுவதுமாக முடக்கிவிடும்.
2022-23 நிதியாண்டில் பத்திரப்பதிவுத்துறை ஈட்டிய மொத்த வருவாய் ரூ.17,297 கோடி. அதற்கு முந்தைய ஆண்டை விட இது 24.3 சதவீதம் அதிகம்.
இவ்வாறு இருக்கையில் எதற்காக முத்திரைத்தாள் கட்டணத்தையும், நிலத்தின் வழிகாட்டி மதிப்பையும் பன்மடங்கு உயா்த்த வேண்டும்?.
நிலத்தின் வழிகாட்டி மதிப்பு உயா்வு தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்ட நிலையில், இனி சந்தை விலை கடுமையாக உயரும் அபாயம் உள்ளதால், அரசால் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு இழப்பீடு வழங்க மட்டுமே இந்தப் புதிய வழிகாட்டி மதிப்பை பயன்படுத்த வேண்டும்.
மேலும், அறிவிக்கப்பட்ட 10 மடங்கு முத்திரைத்தாள் கட்டண உயா்வை அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என தெரிவித்துள்ளாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.