நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 7,171 பேருக்கு கரோனா தொற்று
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,171 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுதில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,171 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை 7,533 ஆக இருந்த தொற்று பாதிப்பு சனிக்கிழமை 7,171 ஆக குறைந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,171 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 4,49 கோடியாக உள்ளது. மேலும் 40 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து இறப்பு எண்ணிக்கை 5,31,508 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் உயரிழந்தவர்களில் 15 பேர் கேரளம், தில்லியில் 6 பேர், உத்தரப்பிரதேசத்தில் 4 பேர், சத்தீஸ்கரில் 3 பேர், ஹரியாணா, கர்நாடகா, மகாராஷ்டிரம் மற்றும் தமிழ்நாட்டில் தலா 2 பேர், மேகாலயா, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் மற்றும் சண்டிகரில் தலா ஒருவர் என 40 பேர் உயிரிழந்துள்ளனர். இறப்பு விகிதம் 1.18% ஆக உள்ளது.
தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 3.69% ஆகவும், வாராந்திர தொற்று பாதிப்பு விகிதம் 4.72% ஆகவும் உள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 9,669 பேர் குணமடைந்துள்ளனர், மொத்தம் 4,43,56,693 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை நேற்று 53,852 ஆக இருந்த நிலையில், இன்று சனிக்கிழமை 51,314 ஆக குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 1,94,134 பேரிடம் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 92.64 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.