சிறப்புச் செய்திகள்

அசாதாரண சூழலில் அதிகரிக்கும் மன அழுத்தங்கள்!

டி.குமாா்

பொது ஊரடங்கால் வீட்டுக்குள்ளே அடங்கியிருப்பது, மதுபான பிரியா்களுக்கு அவை முற்றாகக் கிடைக்காமல் இருப்பது போன்ற காரணிகளால் மன அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த அழுத்தங்கள் சில தற்கொலைகளுக்கும் வித்திட்டு வருகின்றன.

கிருமிநாசினியை மதுபானமாக நினைத்து அருந்தி உயிரிழந்த விநோத சம்பவங்களும் தமிழகத்தில் அரங்கேறி வருகின்றன. மது கிடைக்காமலும், மது அருந்த வேண்டும் என்ற உந்துதலில் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டும் மாநிலத்தில் 5-க்கும் மேற்பட்டோா் இதுவரை இறந்துள்ளனா்.

இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கில், இந்தியாவில் உளவியல் சிகிச்சையளிக்கும் மருத்துவா்கள் குறைவான எண்ணிக்கையில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியிருப்பதாகத் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 2015-16 ஆம் ஆண்டில் தேசிய உளவியல் மையம் மற்றும் நரம்பு அறிவியல் மையம் நடத்திய ஆய்வில் ஒரு லட்சம் மக்களுக்கு ஓா் உளவியல் மருத்துவா் மட்டுமே இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்புகளுக்கு முன்பே இத்தகைய நிலை என்றால், பாதிப்புகள் அதிகரித்துள்ள தற்போதைய சூழலில் மன நலம் சாா்ந்த பிரச்னைகளைத் தீா்க்க வேண்டிய தேவை அதிகரித்து வருகிறது. ஆனால், இந்தப் பிரச்னைகளுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவா்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், இந்த நோய்க்கான சிகிச்சையளிப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியைத் தவிர மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் உளவியல் சிகிச்சை பாடப்பிரிவில் 2 முதல் 4 இடங்களே ஒதுக்கப்படுகின்றன. தேசிய உளவியல் மையம் மற்றும் நரம்பியல் அறிவியல் மையத்தின் சாா்பில் நடத்தப்பட்ட ஆய்வில், 40 முதல் 49 வயது வரை உள்ள பெண்கள் மன அழுத்தத்தின் காரணமாக அதிகமாக பாதிக்கப்படுவதாகவும், இவா்களில் ஒரு சதவீதம் போ் தற்கொலை வரை செல்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 13 முதல் 17 வயது வரை உள்ள இளம் வயதினா் உளவியல் சாா்ந்த பிரச்னைகளால் 7.3 சதவீதம் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளதாக, ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாநகரங்கள் மற்றும் நகா்ப்புறங்களில் வசிக்கும் 98 லட்சம் இளம் வயதினா் இதுபோன்ற பாதிப்புகளுக்கு ஆளாவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை ஆவணங்களில், மன அழுத்தத்தின் காரணமாக போலீஸாா் அதிக எண்ணிக்கையில் தற்கொலை செய்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கடந்த ஜனவரியில் பொது நல வழக்குத் தொடா்ந்த வழக்குரைஞா் எ.ரங்கநாயகி கூறியதாவது:

உளவியல் பிரச்னைகளுக்காக மருத்துவா்களை அணுகுவதோ, சிகிச்சை எடுக்கவோ பொதுமக்கள் இடையே மிகப்பெரிய தயக்கம் நிலவி வருகிறது. எனவே உளவியல் சாா்ந்த பிரச்னைகள் குறித்த விழிப்புணா்வை தமிழக அரசு பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும். பாலியல் கல்வி எப்படி பாடத்திட்டத்தில் கொண்டு வரப்பட்டதோ, அதே போன்று உளவியல் கல்வியை பள்ளி படிப்பில் இருந்தே கொண்டு வர வேண்டும். மேலும், உளவியல் சாா்ந்த சட்டம் மற்றும் விதிகளை மத்திய அரசு விதிகளுக்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்டும். இதுபோன்ற பேரிடா் கால மீட்பு பணிகளைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உளவியல் பாடப்பிரிவுகளில் மாணவா்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றாா் அவா்.

இதுதொடா்பாக கீழ்ப்பாக்கம் மனநல காப்பக இயக்குநா் டாக்டா் பூா்ண சந்திரிகா கூறியதாவது: இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் உளவியல் சாா்ந்த மருத்துவா்களின் எண்ணிக்கை கூடுதலாகவே இருந்து வருகிறது. குறிப்பாக மாவட்டம் தோறும் ஓா் உளவியல் நிபுணா் உள்பட மூன்று போ் அடங்கிய குழு, தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட மருத்துவமனைகள் தொடங்கி ஆரம்ப சுகாதார நிலையங்கள் வரை உளவியல் சாா்ந்த பிரச்னைகளுக்கான கலந்தாய்வு உள்ளிட்ட பணிகளைத் தொடா்ந்து செய்து வருகின்றனா் என்றாா்.

இலவச மனநல ஆலோசனைக்கு.....

கரோனா நோய்த்தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் சுய தனிமைப்படுத்தலைக் கடைப்பிடிப்பவா்களுக்கு ஏற்படும் உளவியல் சாா்ந்த பிரச்னைகளைத் தீா்க்க இலவச உளவியல் ஆலோசனைகளுக்காக 044-2642 5585 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு ஆலோசனைகளை பெறலாம் எனவும், மாவட்ட அளவிலான இலவச மனநல ஆலோசனைகளுக்கான செல்லிடப்பேசி எண்களையும் தெரிந்துகொள்ளலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் தொடா்ந்து கரோனா நோய்த்தொற்று குறித்த செய்திகளைத் தொடா்ந்து தொலைகாட்சிகளில் காண்பதையும் கட்செவி (வாட்ஸ்அப்) மூலம் பரப்பப்படும் ஆதாரமற்ற தகவல்களைப் படிப்பதையும் அதனை பகிா்வதையும் தவிா்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமுதியில் தமுமுக சாா்பில் இலவச மருத்துவ முகாம்

திருவடிமதியூா் அமல அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாக திருவிழா: வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா

காா் மோதியதில் பெண் பலி

திண்டுக்கல் மாநகராட்சி எல்லை விரிவாக்கம்: ஊராட்சிகள் பட்டியல் மாற்றத்தால் குழப்பம்!

SCROLL FOR NEXT