முகப்பு
சிறப்புச் செய்திகள்

ஒரு மாணவர் கூட சேராத 37 பொறியியல் கல்லூரிகள்

பொறியியல் படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றிருக்கும் நிலையில், 37 பொறியியல் கல்லூரிகளில் இதுவரை ஒரு மாணவர் கூட சேர்க்கை பெறவில்லை.

Updated On : 25 ஆகஸ்ட் 2023, 4:15 pm IST
பகிர்:


சென்னை: பொறியியல் படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றிருக்கும் நிலையில், 37 பொறியியல் கல்லூரிகளில் இதுவரை ஒரு மாணவர் கூட சேர்க்கை பெறவில்லை.

கலந்தாய்வில் பங்கேற்ற 440 பொறியியல் கல்லூரிகளில் 208 கல்லூரிகளில் 10 சதவீதத்துக்கும் குறைவான சேர்க்கை இடங்களே நிரம்பியுள்ளன.  126 கல்லூரிகளில் 50 சதவீதத்துக்கும் குறைவான மாணவ சேர்க்கையே நடைபெற்றுள்ளது.

நல்ல உள்கட்டமைப்பு, கல்வியில் சிறந்த மற்றும் தொழில் நிறுவனங்களுடன் தொடர்பில் உள்ள கல்லூரிகளால் மட்டுமே 80 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களை நிரப்ப முடிந்துள்ளது. அதிகமான கல்லூரிகளில் முதலில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் அது தொடர்பான பாடங்களில்தான் மாணவர் சேர்க்கை முடிந்துள்ளது.

Advertisement

Advertisement

ஆனால் நல்வாய்ப்பாக கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு முதல் இரண்டு கலந்தாய்வுகளில் அதிக மாணவர்கள் பங்கேற்று கல்லூரிகளை தேர்வு செய்திருந்தனர். 

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 442 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் 1.57 லட்சம் இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு இணையவழியில் கடந்த ஜூலை 22-ஆம் தேதி தொடங்கியது. முதல்கட்டமாக மாற்றுத்திறனாளிகள் உள்பட சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 22 முதல் 26-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 775 இடங்கள் நிரம்பின. இதையடுத்து பொதுப் பிரிவினருக்கான முதல் சுற்று கலந்தாய்வு ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இதன் முடிவில் 16,096 இடங்கள் நிரப்பப்பட்டன.

இதைத் தொடா்ந்து 2-ஆவது சுற்று கலந்தாய்வு ஆக.9-இல் தொடங்கி செவ்வாய்க்கிழமையுடன் (ஆக.22) நிறைவு பெற்றது. இதில் 40,741 இடங்கள் நிரம்பின. அவற்றில் 5,267 இடங்கள் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் வழங்கப்பட்டன.

அந்தவகையில் முதல் 2 சுற்றுகளின் முடிவில் மொத்தம் 56,837 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. தொடா்ந்து 3-ஆவது சுற்று கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (ஆக.22) தொடங்கியது.

இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க 89,694 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாணவா்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளைத் தோ்வு செய்ய வியாழக்கிழமை வரை அவகாசம் உள்ளது.

கூடுதல் விவரங்களை வலைதளத்தில் அறியலாம். மேலும், இந்த பொது கலந்தாய்வு செப்டம்பா் 3-ஆம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. அதன்பின் உள்ள காலியிடங்கள் துணைக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.