முகப்பு
சிறப்புச் செய்திகள்

மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடைய வழக்கில் விடுதலையான பேராசிரியா் சாய்பாபா! யார் இவர்?

மாவோயிஸ்டுகளுடன் தொடா்பு வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து முன்னாள் பேராசிரியா் ஜி.என்.சாய்பாபாவை மும்பை உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விடுதலை செய்தது.

Updated On : 6 மார்ச், 2024 at 12:35 PM
ஜி.என். சாய்பாபா
பகிர்:

கடந்த 1967 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச மாநிலம் அமலாபுரத்தில் பிறந்த ஒரு ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தவர் தில்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியா் கோகரகொண்டா நாக சாய்பாபா (ஜி.என். சாய்பாபா).

இவர் தில்லி பல்கலைக்கழகத்தின் ராம்லால் ஆனந்த் கல்லுரியில் பேராசிரியராக இருந்தார். ஜி.என். சாய்பாபா சக்கர நாற்காலியில் இயங்கும் 80 சதவீத பக்கவாதம் பாதிப்புக்கு உள்ளான மாற்றுத்திறனாளி ஆவார்.

அமலாபுரத்தில் உள்ள ஸ்ரீ கோனாசீமா பானோஜி ராமர்ஸ் (SKBR) கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த சாய்பாபா, பின்னர் 2013-ல் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் மற்றும் தில்லி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

Advertisement

அவர் தனது இளமை பருவத்தில் இருந்தே இடதுசாரி கொள்கையின் மூலம் ஈர்க்கப்பட்டு, ஆந்திரப் பிரதேச மாநில காவல்துறையால் பலமுறை கைது செய்யப்பட்டுள்ளார். சாய்பாபா அகில இந்திய மக்கள் பிரதிநிதித்துவ மன்றம் என்ற அமைப்பின் நிறுவனரும் ஆவார், இது சிறையில் இருக்கும் ஏழைகளுக்கு சட்ட உதவியை செய்யும் ஒரு அமைப்பாகும்.

மகாராஷ்டிரத்தில் உள்ள மாவோயிஸ்ட் ஆதரவு உள்ள பகுதியான கட்சிரோலியில் உள்ள காவல் துறையினர் சமர்பித்த குற்றப்பத்திரிகைகளின் படி, 57 வயதுடைய பேராசிரியர் ஜி.என். சாய்பாபா இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஒத்த கருத்துள்ள கம்யூனிஸ்ட் அமைப்புகளை இணைக்க செயல்பட்டதாகவும், அவரது எழுத்துகள் கிளர்ச்சியாளர் அபுஜ்மாட் காடுகளிலிருந்து நேபாளம் மற்றும் இலங்கை வரை பரவியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

'பிரகாஷ்' மற்றும் 'சேத்தன்' போன்ற போலி பெயரில் சாய்பாபா செயல்பட்டதாகவும், காவல் துறை மீதான பல தாக்குதலுக்கு பின்புலமாக இருந்ததாகவும், ஜனநாயகத்திற்கு எதிரான கிளர்ச்சிகளுக்கு இளைஞர்களைச் சேர்க்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டதாகவும் காவல்துறை சமர்பித்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவர் 2005-ல் புரட்சிகர ஜனநாயக முன்னணியில் சேர்ந்தார், இது ஆந்திரப் பிரதேசத்தில் நாசவேலை நடவடிக்கைகளுக்காக தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பாகும். இவர் மாவோயிஸ்ட் மத்திய குழு உறுப்பினரான அனுராதா தாண்டேவின் பெயரில் ஒரு குழுவை அமைத்து பிரபலமடைந்தார்.

2010 ஆம் ஆண்டு தில்லியின் ஜே.என்.யு-வில் அவரது நினைவாக ஒரு உரையை நிகழ்த்தி, ஒத்த சிந்தனையுடைய நபர்களை அழைத்து ஒருங்கிணைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டுகளும் வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில்தான், மாவோயிஸ்டுகளுடன் தொடா்பு வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து தில்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியா் ஜி.என்.சாய்பாபாவை மும்பை உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments