உறுப்பு தானம் கேட்டு விளம்பரம் கொடுக்கலாமா? மத்திய அரசுக்கு தில்லி உயர் நீதிமன்றம் கேள்வி
பிரபலமானவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படும்போது, ஊடகங்களில் தகவல் வெளியானதும், அவர்களுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்பட்டால், எளிதில் கொடையாளர்கள் கிடைத்து விடுகிறார்கள்.
குடும்பக் கொடையாளர் இல்லாத ஒருவர், உறுப்பு தானம் கேட்டு விளம்பரம் கொடுக்கலாமா? என்பது குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு தில்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சிறுநீரக பாதிப்புக்குள்ளான வினோத் குமார் ஆனந்த் என்பவர், தனது மனுவில் கூறியிருப்பதாவது:
பிரபலமானவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படும்போது, ஊடகங்களில் தகவல் வெளியானதும், அவர்களுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்பட்டால், எளிதில் கொடையாளர்கள் கிடைத்து விடுகிறார்கள். ஆனால், சாமானிய மக்கள், உறுப்பு தானக் கொடையாளர் கேட்டு விளம்பரம் கொடுப்பதற்கு உரிமையில்லை.
உறுப்புகள், திசுக்கள் ஆகியவற்றை கொடையாளர்களிடம் இருந்து பெற்றும், தேவைப்படுவோருக்கு வழங்கும் ’தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு' சரிவர தனது பணியைச் செய்யாததால், அந்த அமைப்பைக் கலைத்துவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த மனுவை திங்கள்கிழமை விசாரித்த தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் சச்தேவா, மனுதாரரின் கோரிக்கை குறித்து பதிலளிக்குமாறு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், அந்த அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ’தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு', எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி ஆகியவை பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.