தற்போது (1.09.2017) அம்பத்தூர், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, காசிமேடு, புதுவண்ணாரப்பேட்டை என சென்னையின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. தென்மேற்குப் பருவமழை வலுவடைந்ததன் எதிரொலியாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பொழிய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தைப் போல செப்டம்பரிலும் பரவலாக மழை பெய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தச் செய்தி சென்னை மக்களைப் பொருத்த வரையில் நல்ல செய்தி. கடந்த 150 ஆண்டு காலத்தில் ஆகஸ்ட் மாதத்தில் தான் அதிக மழை பொழிந்துள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவ மழையின் தாக்கம் மற்றும் வெப்ப சலனம் காரணமாகவும் தமிழகத்தில் குமரி, திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் போன்ற பல இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் வால்பாறையில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழை வலுவடைந்துள்ளதால் மேலும் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மிதமான மழையும் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.