கடந்த 2016 ஆம் ஆண்டு, இந்தியப் பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு செய்தியை இரவு 8 மணியளவில் தொலைக்காட்சியில் தோன்றி மக்கள் அனைவரையும் அதிரச் செய்யும் விதத்தில் பரபரப்புச் செய்தியாக அறிவித்தார். அந்த நிமிடம் முதல் சில மாதங்களுக்குள்ளாக பொதுமக்கள் அதுவரை பயன்படுத்தி வந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் மதிப்பு நீக்கம் செய்யப்பட்டு வெறும் காகிதங்கள் என்றாகின. தற்போது பழைய ரூபாய் நோட்டுக்களுக்குப் பதிலாகப் புது 2000 மற்றும் 500, 200, 50 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.
அதெல்லாம் சரி, ஆனால் கடந்த பல ஆண்டுகளாக நம்மோடு ஒட்டி உறவாடிய பின் திடீரென ஒரே நாளில் நம்மிடமிருந்து பணமதிப்பிழப்பு என்ற பெயரில் பறிக்கப்பட்டனவே அந்த 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களின் கதி என்ன ஆயிற்றோ? என்ற கவலை எல்லோருக்கும் இருக்குமில்லையா?
அந்த ரூபாய் நோட்டுக்கள் தற்போது தமிழக சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனவாம். அங்கிருக்கும் கைதிகளில் திறன் வாய்ந்த சிலருக்கு அது ஒரு புது விதமான வேலை வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கிறது. ஆம், மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுக்கள் சிறு, சிறு துகள்களாக மாற்றப்பட்டு மிகுந்த அழுத்தம் கொடுத்து கைகளால் அரைக்கப்பட்டு அரசாங்க அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் கோப்புகளாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனவாம். இந்தக் கோப்புகள் முற்றிலும் சிறைக்கைதிகளால் மேனுவலாகத் தயாரிக்கப்படுகிறது.
இதற்கென தனி இயந்திரங்கள் பயன்படுத்தப்படவில்லை. இந்த வேலையில் ஈடுபடுத்தப்படும் கைதிகளுக்கு நாளொன்றுக்கு 160 முதல் 200 ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது. தினமும் 25 முதல் 30 சிறைக்கைதிகள் இந்த வேலையில் ஈடுபடுத்தப்பட்டு ஒருநாளில் சுமார் 1000 கோப்புகள் வரை தயாரிக்கப்படுகின்றன என பிடிஐ செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
Image courtesy: thenewsminute.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.