நிலத்தடிப் பதுங்கு அறையில் தங்கவைக்கப்பட்ட அதிபர் டிரம்ப்!
அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்கு வெளியே நூற்றுக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தியதால் அதிபர் டொனால்ட் டிரம்ப், சிறிது நேரம் மாளிகையின் நிலத்தடித் தளப் பதுங்கு அறையில் தங்க வைக்கப்பட்டார்.
வாஷிங்டன்: அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்கு வெளியே நூற்றுக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தியதால் அதிபர் டொனால்ட் டிரம்ப், சிறிது நேரம் மாளிகையின் நிலத்தடித் தளப் பதுங்கு அறையில் தங்க வைக்கப்பட்டார்.
வெள்ளை மாளிகைக்கு வெளியே வெள்ளிக்கிழமை இரவு வெளியே நடந்த போராட்டத்தைக் கண்டு டிரம்ப் குழுவினர் அதிர்ந்துவிட்ட நிலையில், அவர் மறைத்துவைக்கப்பட்டதாக அமெரிக்க நாளிதழான நியு யார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு டிரம்ப் மீண்டும் மேல் தளத்துக்கு அழைத்துவரப்பட்டார். நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் திரண்டு மாளிகையை நோக்கி முன்னேறியதைக் கண்டு அதிர்ச்சியுற்ற, ரகசிய காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தச் செய்தனர்.
எனினும், டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப், மகன் பேரன் டிரம்ப் ஆகியோரும் அவருடன் பதுங்கு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனரா என்பது தெரியவில்லை.
மினிசொட்டா மாகாணத்திலுள்ள மினியாபொலிஸ் நகரில் காவல்துறையினரால் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து அமெரிக்கா முழுவதும் கடும் போராட்டங்களும் வன்முறைகளும் நடந்துவருகின்றன.
போராட்டத்தைச் சமாளிக்க முடியாமல் அமெரிக்காவில் வாஷிங்டன் டி.சி. மற்றும் ஏறத்தாழ 40-க்கும் அதிகமான நகர்களில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
வாஷிங்டன் மற்றும் 15 மாகாணங்களில் போராட்டத்தைச் சமாளிக்க தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.