அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் கம்பாளி கிராமத்தில் கடந்த சில நாள்கள் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள அரசுப் பள்ளிக் கட்டடத்தை மழைநீர் பெருமளவில் சூழ்ந்துள்ளது. இதனால் கட்டடத்தின் உறுதித்தன்மை பாதிக்கப்பட்டுச் சேதமடையும் அபாயச் சூழல் ஏற்பட்டுள்ளது.
கம்பாளி கிராமத்தில் ஒரு அரசு தொடக்கப்பள்ளி மற்றும் ஒரு அரசு உயர்நிலைப்பள்ளி ஆகியன உள்ளன. இதில் உயர்நிலைப் பள்ளியில் 6 முதல் 10 வரை உள்ள வகுப்புகளில் மொத்தம் சுமார் 300க்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். தற்போதைய கரோனா சூழல் காரணமாக பள்ளியில் நேரடி வகுப்புகள் நடைபெறவில்லை. அதே வேளையில் இக்கிராமத்தில் கடந்த சில நாள்களாகப் பெய்த கனமழைகாரணமாக பள்ளியைப் பெருமளவு மழைநீர் சூழ்ந்துள்ளது.
தாழ்வான இப்பகுதியில் மழைநீர் வெளியேற வழியில்லாத நிலை உள்ளதால், பல நாள்கள்வரையோ அல்லது மழை தொடரும் பட்சத்தில் மாதக்கணக்கிலோகூட நீர் தேங்கியபடியே நிற்கும் அபாயச்சூழல் உள்ளது. இதனால் கட்டடத்தின் உறுதித்தண்மை பாதிக்கப்பட்டுப் பாழடையும் சூழல் உள்ளது.
மேலும், மாணவர்கள் நேரடி வகுப்பிற்கு வருவது இன்னும் முடிவாகாத சூழலாக இருந்தாலும், கட்டடத்தை உரிய பராமரிப்பு செய்வது அவசியம். எனவே அந்த வகையில் விரைவில் நடவடிக்கை எடுத்து பள்ளி கட்டடத்தை சூழ்ந்துள்ள மழைநீரை விரைவில் வெளியேற்றவேண்டுமென மாணவர்களின் சார்பில் பள்ளி நிர்வாகத்திற்குப் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருச்சுழி வட்டம் கம்பாளி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக் கட்டடத்தைச் சூழ்ந்துள்ள மழைநீரால் கட்டடத்தின் உறுதித்தண்மை குறைந்து சேதமடையும் அபாயம் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.