புதுவை காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறது என்றும் எனவே பதவி விலகத்தேவையில்லை என்றும் முதல்வர் நாராயணசாமி உறுதிபட தெரிவித்தார்.
புதுவை காங்கிரஸ் அலுவலகத்தில் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 இடங்களில் ஆளும் காங்கிரஸ் கட்சி 3 திமுக, 1 சுயேச்சை என 18 எம்எல்ஏக்களுடன் பெரும்பான்மை வகித்து வந்த நிலையில், அடுத்தடுத்து நான்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்ததால், பெரும்பான்மை இழந்துள்ளது.
அடுத்தடுத்து சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து புதுச்சேரி அரசியலில் பரபரப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, விதிமுறைகளுக்கு உள்பட்டு ஆளும் காங்கிரஸ் கட்சி செயல்படும். புதுவை அமைச்சரவை ராஜினாமா செய்யப்படாது. காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறது என்றார்.