தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அ.ம.மு.க.வைச் சேர்ப்பது பற்றி அதிமுக தலைவர்களான எடப்பாடி பழனிசாமியும் ஓ. பன்னீர்செல்வமும்தான் முடிவு செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலரும் தமிழகப் பொறுப்பாளருமான சி.டி. ரவி தெரிவித்தார்.
புது தில்லியில் இன்று பா.ஜ.க. பொறுப்பாளர் வி.டி. ரவி முன்னிலையில் தில்லி மாநில தே.மு.தி.க.வின் முன்னாள் மாநிலச் செயலரும் அதிமுகவின் முக்கிய பிரமுகருமான வி.என். தட்சிணாமூர்த்தி பாரதிய ஜனதாவில் இணைந்தார்.
பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய சி.டி. ரவி, தமிழக கூட்டணியில் அமமுக இடம் பெறுமா என்ற கேள்விக்குப் பதிலளித்தார்.
"தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் இணைந்து போட்டியிட ஏற்கெனவே பா.ஜ.க. முடிவு செய்துள்ளது.
மேலும், கூட்டணியில் தமிழகத்தில் அதிமுகதான் பெரிய கட்சி. பாரதிய ஜனதா சிறிய கட்சி. முதல்வர் பழனிசாமியும் ஓ. பன்னீர்செல்வமும் அனுபவம் மிக்க அரசியல் தலைவர்கள். கூட்டணியில் அமமுகவும் இடம் பெறுமா, இல்லையா என்று அவர்கள்தான் முடிவு எடுப்பார்கள்.
அவர்களுக்குத்தான் சசிகலா - தினகரன் ஆகியோரின் பலம் பற்றி நன்றாகத் தெரியும். அவர்கள் முடிவு செய்வார்கள்" என்றார் ரவி.
இந்தச் சந்திப்பின்போது, முன்னாள் எம்.பி. சி. நரசிம்மன், வி.என். தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.