தருமபுரி: தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை திருட்டு சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே நாத்தனூரை சேர்ந்தவர் அருள்மணி (35). இவரது மனைவி மாலினி (19). கர்ப்பிணியான மாலினி பிரசவத்திற்காக கடந்த ஜூன் 18-ஆம் தேதி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு 19-ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் தனது குழந்தையுடன் வார்டில் தொடர் சிகிக்சையில் மருத்துவமனையில் இருந்த, மாலினி ஞாயிற்றுக்கிழமை காலை கழிப்பறைக்கு சென்று மீண்டும் வார்டுக்கு திரும்பியுள்ளார். அப்போது தனது படுக்கை அருகே இருந்த குழந்தையை காணவில்லை. மருத்துவமனை வார்டு முழுவதும் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது கணவர் அருள்மணி, தருமபுரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் குழந்தையை திருடிச்சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர். மேலும் மகப்பேறு சிகிச்சைக்கு பிரிவு கட்டடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் குழந்தையை எடுத்துச் செல்வது தெரியவந்தது.
இதையடுத்து தருமபுரி துணை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் தொடர்ந்து குழந்தையை திடுடிச்சென்ற நபரை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.கலைச்செல்வன் மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.