மாட்டுத் தீவனத்தில் கடத்தப்பட்ட ரூ.6 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் பறிமுதல்: 3 பேர் கைது
குன்னத்தூர் அருகே கர்நாடகத்தில் இருந்து மாட்டு தீவனத்தில் கடத்தி வரப்பட்டு விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ரூ.6 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் பறிமுதல்
அவிநாசி: குன்னத்தூர் அருகே கர்நாடகத்தில் இருந்து மாட்டுத் தீவனத்தில் கடத்தி வரப்பட்டு விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ரூ.6 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
குன்னத்தூர் செங்கப்பள்ளி சாலையில் மாட்டுத் தீவனத்தில் மது பாட்டில்களை வைத்து கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக அவிநாசி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து குன்னத்தூர் செங்கப்பள்ளி சாலை பூலாங்குளம் பகுதி சம்பத்குமார் என்பவருக்கு சொந்தமான வாடகை குடோனை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
Advertisement
அப்போது, குடோனில் கர்நாடகம் மாநிலத்தில் இருந்து மாட்டுத் தீவனத்தில் மறைமுகமாக கடத்திவரப்பட்ட 6500 மதுபாட்டில்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து இவ்வழக்கில் தொடர்புடைய ஜெய்சன் (38), பாலசிங் ( 22), கருப்பசாமி (22)ஆகிய 3 பேரை அவிநாசி மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.
மேலும் இவர்களிடமிருந்து 2 வேன், ஒரு கார், ரூ. 6 லட்சம் மதிப்பிலான 6500 கர்நாடக மதுபாட்டில்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.