கரோனா விதிமுறைகளை மீறுபவர்களிடம் அபராதம் வசூலிக்க வேண்டும் என தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் கரோனா தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்துவது தொடர்பான மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் கரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டார்.
மேலும், காய்ச்சல் முகாம்களை அதிகப்படுத்தி கரோனா தொற்று உள்ளவர்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கவேண்டும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும், முகக்கவசம் அணிவது உள்ளிட்ட விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்க வேண்டும், தகுதி வாய்ந்த நபர்களை அடையாளம் கண்டு கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளச் செய்ய வேண்டும் போன்றவற்றை வலியுறுத்தினார்.
கரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை அரசு துறை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தலைமை செயலர் அறிவுறுத்தினார்.