புதுதில்லி: நாட்டில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக கரோனா தினசரி பாதிப்பில் ஒரே நாளில் 4,01,993 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் இத்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.91 கோடியாக உயர்ந்துள்ளது. இத் தொற்றுக்கு ஒரே நாளில் 3,523 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 3,523 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். அவர்களுடன் சேர்த்து இதுவரை மொத்தம் 2,11,853 பேர் இறந்துள்ளனர். உயிரிழந்தோரின் சதவீதம் 1.11 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக மேலும் 4,01,993 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோரின் சதவீதம் 81.99 சதவீதமாக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 32,68,710 ஆக உயர்ந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 16.90 சதவீதமாகும். அதேவேளையில் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,56,84,406 ஆக உள்ளது.
நாட்டில் ஏப். 30 வரை 28,83,37,385 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 19,45,299 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
தேசிய அளவில் ஒரே நாளில் 4.01 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் தில்லி, மேற்குவங்கம், கர்நாடகம், கேரளம், சத்தீஸ்கர், தமிழகம், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட பத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். வெள்ளிக்கிழமை மட்டும் 2,99 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
நாட்டில் இதுவரை மொத்தம் 15.49 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 45 வயதுக்கு மேல் 60 வயதுக்கு உள்பட்டோர் என்ற முன்னுரிமையில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என அமைச்சகம் தெரிவித்துள்ளது.