18 பிளஸ்: இன்னமும் தடுப்பூசி தொடங்கப்படவில்லை?
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இன்னமும் 18 முதல் 44 வயதுக்குள்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படவில்லை
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இன்னமும் 18 முதல் 44 வயதுக்குள்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதினெட்டு வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி செலுத்தும் பணியை திருப்பூரில் வியாழக்கிழமை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கிவைத்தார்.
சென்னையில் வெள்ளிக்கிழமை காலை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் என எங்கேயும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியவில்லை.
ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி மட்டும் செலுத்தப்பட்டது. யாருக்கும் முதல் தவணையாக தடுப்பூசி செலுத்தப்படவில்லை.
இதுதொடர்பாக, இன்னமும் அரசாணை பிறப்பிக்கப்படவில்லை எனவும் தடுப்பூசி மையங்களுக்கு இன்னமும் மருந்துக் குப்பிகள் இருப்பு சென்றடையவில்லை என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
மாநிலத்தின் பிற பகுதிகளிலும் ஏறத்தாழ இதுதான் நிலைமை எனத் தகவலறிந்த வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்காக வெளிநாடுகளிலிருந்து நேரடியாக வாங்குவது உள்பட பல்வேறு முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.