15 அம்ச கோரிக்கை: ஊரக வளர்ச்சித்துறை அனைத்துப் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.
ஸ்ரீவில்லிபுத்தூர்: 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து பணியாளர் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் முனியாண்டி தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் அருணாச்சலம் முன்னிலை வைத்தார். மாநில துணைத்தலைவர் ராமசுப்பு கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஓஎச்டி ஆபரேட்டர்களின் அரசாணை 205 அமல்படுத்தவேண்டும். மாவட்ட மற்றும் வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஒரே மாதிரியான ஊக்கத்தொகையை மாவட்ட முழுவதும் மாதம் ரூ. 20 ஆயிரம் வழங்க வேண்டும்.
பத்தாண்டு முடித்தவர்களுக்கு பணிக்காலம் கருத்தில் கொண்டு இளநிலை உதவியாளர் பணியிடம் வழங்க வேண்டும். துப்புரவு பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும். ஊராட்சி செயலாளர்கள் பணி காலத்தை கருத்தில் கொண்டு சிறப்பு நிலை தேர்வு நிலையில் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
பணியாளர் பெற்று வரும் காலமுறை ஊதியத்தை கருவூலத்தில் வழங்க வேண்டும். கரோனாவில் இறந்தவர்களுக்கு குடும்ப நல நிதியாக 25 லட்சம் கொடுக்க வேண்டும்.
ஊரக வளர்ச்சித் துறையில் கரோனா தடுப்பு பணி செய்த முன்களப் பணியாளர்களுக்கு முதலமைச்சர் சொன்னபடி ஊக்கத்தொகை ரூ.15 ஆயிரத்தை உடனடியாக வழங்க வேண்டும்.
ஊராட்சி செயலர்கள் நியமனத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் தலையீட்டை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு ஊராட்சியைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் ஒன்றிய தலைவர் திருநாவுக்கரசு,பொருளாளர் மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.