முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழக பாஜக தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: ஒருவர் கைது

சென்னை தி.நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் பொட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் பொட்ரோல் குண்டு வீசப்பட்டது.
பகிர்:


சென்னை: சென்னை தி.நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் பொட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

சென்னை தி.நகரில் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் அமைந்துள்ளது. புதன்கிழமை நள்ளிரவு அந்த அலுவலகத்தின் நுழைவு வாயிலில் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத சிலர், அடுத்தடுத்து 3 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். 

இந்த சம்பவத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. போலீஸார் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் இருந்தபோதும், அங்கு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து தகவல் அறிந்து பாஜக தலைமை அலுவலகம் வந்த  துணை ஆணையர் மற்றும் போலீஸார், பாஜக அலுவலகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சாலைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை சேகரித்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.  

இந்நிலையில், சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் நந்தனத்தை சேர்ந்த வினோத் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், வினோத் மீது பல குற்றவழக்குகள் உள்ளதாகவும், நீட்டை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதை கண்டித்து பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்துள்ளது. 

பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை அடுத்து அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் கட்சியினரிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.