தலைக்கவசம் அணியாமல் சென்ற பிரசாந்த்துக்கு அபராதம்!
நடிகர் பிரசாந்த் மற்றும் தொகுப்பாளினிக்கு தலா ரூ. 1000 அபராதம்.
தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டிய நடிகர் பிரசாந்த்துக்கு சென்னை போக்குவரத்து காவல் துறை அபராதம் விதித்துள்ளது.
நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அந்தகன் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் பிரசாந்த், சிம்ரன், ப்ரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ். ரவிகுமார், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
விஜய்யின் 68-வது படமான `கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. - Greatest Of All Times) படத்திலும் பிரசாந்த் நடித்து வருகிறார்.
Advertisement
நடிகர் பிரசாந்த் அந்தகன் படத்தின் புரோமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இதனிடையே, பிரசாந்த் யூடியூப் சேனலுக்கு இருசக்கர வாகனம் ஓட்டிக்கொண்டு தலைக்கவசம் அணியாமல் தொகுப்பாளினியுடன் நேர்காணல் வழங்கியிருந்தார்.
இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இணைய வாசிகள் தங்களது கண்டனங்களையும் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற நடிகர் பிரசாந்த் மற்றும் தொகுப்பாளினி ஆகிய இருவருக்கும் தலா ரூ. 1000 அபராதம் விதித்து சென்னை போக்குவரத்து காவல் துறை உத்தரவிட்டுள்ளது.