வாழப்பாடி: வாழப்பாடி அருகே புதன்கிழமை மாலை துக்கம் விசாரித்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய கணவன்- மனைவி மீது ரெக்கவரி வாகனம் மோதி பலியான சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம்,வாழப்பாடி வாழப்பாடி அடுத்த படையாச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முருகன் (58). இவரது மனைவி பொன்னம்மாள் (54). இருவரும் புதன்கிழமை மாலை வாழப்பாடி அருகே காட்டு வேப்பிலைப்பட்டி ஊராட்சி சேஷன்சாவடியில் உறவினர் ஒருவர் இறந்ததற்கு துக்கம் விசாரிக்க இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
துக்கம் விசாரித்து விட்டு சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் வீடு திரும்பியுள்ளனர். சேசன்சாவடி அருகே சென்று கொண்டிருந்த போது கோயம்புத்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ரெக்கவரி வாகனம், எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில், படுகாயம் அடைந்த பொன்னம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் நிலையில் வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட விவசாயி முருகனும் பலியானார்.
உறவினரின் வீட்டிற்கு சென்று துக்கம் விசாரித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய கணவன்-மனைவி, சாலை விபத்தில் பலியான சம்பவம் அவர்களது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்து குறித்து லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.