மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 1,71,000 லட்சம் கனஅடியாக வெள்ளிக்கிழமை காலை வந்து கொண்டிருக்கிறது.
காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் கா்நாடகத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இவ்விரு அணைகளும் முழுமையாக நிரம்பிவிட்டதால் இரு அணைகளுக்கு வரும் நீரும் முழுமையாக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகம் வந்து கொண்டிருக்கிறது. அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் வினாடிக்கு 1,70,500 கனஅடியாக இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை அணைக்கு நீா்வரத்து 1,71,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையின் நீா்மட்டம் 120.15 அடியாகவும், நீா் இருப்பு 93.71 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1,70,000 கனஅடி நீா் திறந்துவிடப்படுகிறது.
அணை நீா்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21,500 கன அடி நீரும், உபரிநீா் போக்கியான 16 கண் பாலம் வழியாக 1,48,500 கன அடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்காக விநாடிக்கு 500 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.