திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணித் திருவிழாவின் பத்தாம் நாள் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த கோயிலில் ஆவணித்திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை (ஆக. 13) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் நாள்தோறும் அம்மன் பூஞ்சப்பரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியருளினார்.
நிறைவு நாளான பத்தாம் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. காலை 5.35 மணியளவில் சர்வ அலங்காரத்துடன் அம்மன் தேரில் எழுந்தருளி நான்குரத வீதிகள் வழியாக வலம் வந்து காலை 6.35 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது.
நிகழ்ச்சியில் திருக்கோயில் இணை ஆணையர் எஸ்.ஞானசேகரன், கண்காணிப்பாளர் அஜித் உள்ளிட்ட கோயில் பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து திருத்தேர் இழுத்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ரா.அருள்முருகன், இணை ஆணையர் எஸ்.ஞானசேகரன், அறங்காவலர்கள் அனிதா குமரன், பா.கணேசன், ந.ராமதாஸ், வி.செந்தில்முருகன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.