காத்திருப்பு போராட்டம் : சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகம் முன்பு போலீசார் குவிப்பு
கே.பாலகிருஷ்ணன் தலைமையில் காத்திருப்பு போராட்டம் தொடங்கியுள்ள நிலையில், சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சிதம்பரம்: சிதம்பரத்தில் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட வீடுகளுக்கு மாற்று இடம், வீட்டுமனை பட்டா வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் வெள்ளிக்கிழமை காலை காத்திருப்பு போராட்டம் தொடங்கியுள்ள நிலையில், சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகரத்துக்குள்பட்ட தில்லையம்மன் கோவில் தெரு, தில்லையம்மன் ஓடை, ஞானப்பிரகாசம் குளக்கரை, அண்ணா தெரு, அம்பேத்கா் நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்த பொது மக்களின் வீடுகளை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு நீா்நிலை ஆக்கிரமிப்பு என்ற பெயரால் அகற்றப்பட்டன. இவா்களுக்கு தற்போது வரை மாற்று இடம் வழங்கப்படவில்லை. இதுதொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையில் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் மனு அளித்தும், போராட்டம் நடத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், வீடுகளை இழந்த பொது மக்களுக்கு வீட்டுமனை வழங்க வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஆக.30) காத்திருப்புப் போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
Advertisement
இதுதொடா்பாக சிதம்பரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை அமைதிப் பேச்சுவாா்த்தைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், வருவாய்த் துறையினா் 15 நாள்கள் அவகாசம் வேண்டும் எனவும், போராட்டத்தை தள்ளி வைக்குமாறு கூறினா். இதற்கு, சம்மதம் தெரிவிக்காத அவா்கள் அறிவித்தபடி காத்திருப்புப் போராட்டம் நடைபெறும் என கூறிவிட்டு கூட்டத்தை விட்டு வெளியேறினா்.
இந்த நிலையில், சிதம்பரத்தில் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட வீடுகளுக்கு மாற்று இடம், வீட்டுமனை பட்டா வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் வெள்ளிக்கிழமை காலை உதவி ஆட்சியா் அலுவலகத்தில் தொடா் காத்திருப்பு போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
காத்திருப்பு போராட்டத்தில் மூத்த உறுப்பினர் மூசா, மாநில குழு உறுப்பினர் எஸ். ஜி. ரமேஷ்பாபு, நகரமன்ற துணைத் தலைவர் எம்.முத்துக்குமார், நகர செயலாளர் ராஜா மற்றும் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்ட உரிமையாளர்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றுள்ளனர்.
போராட்டத்தை முன்னிட்டு டிஎஸ்பி டி.அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் தலைமையில் உதவி ஆட்சியர் அலுவலகம் முன்பு சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.