முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆனைமடுவு அணை நீர்மட்டம் 45 அடியாக உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே ஆனைமடுவு அணை பகுதியில் பெய்து வரும் பருவ மழையால் அணையின் நீர்மட்டம் 45 அடியாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On : 31 ஆகஸ்ட், 2024 at 4:09 AM
வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையின் தோற்றம்.
பகிர்:

வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே ஆனைமடுவு அணை பகுதியில் பெய்து வரும் பருவ மழையால் அணையின் நீர்மட்டம் 45 அடியாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வாழப்பாடி அருகே ஆனைமடுவு அணை பகுதியில் பெய்து வரும் பருவ மழையால் சனிக்கிழமை (ஆக.31) காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 45 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை கிராமத்தில் வசிஷ்டநதிதியின் குறுக்கே, 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 263.86 ஏக்கர் பரப்பளவில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது.

Advertisement

இந்த அணையால், குறிச்சி, நீர்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, சின்னம நாயக்கன்பாளையம், சந்திரபிள்ளைவலசு உள்ளிட்ட கிராமங்களில், 5,011 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன.

பேளூர், குறிச்சி, கொட்டவாடி, அத்தனூர்பட்டி ஏரிகளும், 20க்கும் மேற்பட்ட ஆற்றுப்படுகை கிராமங்களும், நிலத்தடி நீர் ஆதாரமும், பாசன வசதியும் பெறுகின்றன.

கடந்தாண்டு அக்டோபர் முதல் நிகழாண்டு ஏப்ரல் மாதம் வரை அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யவில்லை. இதனால், அணைக்கு நீர்வரத்து அடியோடு நின்று போன நிலையில், வரலாறு காணாத அளவுக்கு சுட்டெரித்த கோடை வெப்பத்தால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்தது. கடந்த மே மாதம் வரை அணையில், 10.60 அடியில், 12.87 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே குட்டை போல சேறும் சகதியுமாக தேங்கிக் கிடக்கிறது. இதனால், கவலையடைந்த விவசாயிகள் மழையை எதிர்பார்த்து காத்துக் கிடந்தனர்.

இந்தநிலையில், கோடை மழையில் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து ஜூலை மாத இறுதியில் அணையின் நீர்மட்டம் 25.75 அடியை எட்டியது. அணையில் 35.06 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியது.

இதனையடுத்து இந்த மாதத்தில் தொடர்ந்து பெய்து வரும் பருவமழையால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

அணையில் சனிக்கிழமை காலை(ஆக.31)சனிக்கிழமை காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 45 அடியாக உயர்ந்துள்ளது.

அணையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி 98 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியுள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான சித்தேரி, குதிமடுவு, பெரியகுட்டி மடுவு, சந்தமலை, அருநூற்றுமலை பகுதியில் மழை பெய்து வருவதால் அணையின் முக்கிய நீர் பிடிப்புப் பகுதிகளில் உள்ள நீரோடைகளில் நீர்வரத்து துவங்கியுள்ளது. அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவதால், இந்த ஆண்டு இறுதிக்குள் ஆனைமடுவு அணை முழு கொள்ளளவையும் எட்டி நிரம்பும் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளதால் அணை பாசன விவசாயிகளும், சுற்றுப்புற கிராம மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments