பட அறிவிப்பு வெளியாகி 300 நாளாச்சு; விடாமுயற்சி அப்டேட் என்னாச்சு என்று புதுச்சேரியில் அஜித் ரசிகர்கள் பேனர் வைத்து தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
தற்போது தமிழ் திரையுலகில் புதிய ட்ரெண்ட் ஒன்று உருவாக்கியுள்ளது. பிரபல நடிகர்களின் பிறந்தநாள் மற்றும் படத்தின் ஆண்டு விழா நாள்களில் அவர்களது வெற்றி படங்களை மீண்டும் ரீலீஸ் செய்து வருகின்றனர்.
இது ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருவதால் திரையரங்குகளின் உரிமையாளர்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில வாரங்களில் வாரணமாயிரம், ஆயிரத்தில் ஒருவன், மின்னலே, காதலுக்கு மரியாதை, அண்ணாமலை, திருமலை போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் நடிகர் அஜித் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளியான வாலி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நடிகர் அஜித் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். சிம்ரன் மற்றும் ஜோதிகா ஹீரோயின்களாக நடித்திருந்த இந்த படம் நடிகர் அஜித்திற்கு மிகப்பெரிய திருப்புமுனை கொடுத்த படம்.
கடந்த 23ஆம் தேதி புதுவையில் திரையரங்குகளில் வெளியானது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அஜித் ரசிகர்கள் ஒன்று திரண்டு ரீ ரிலீஸ் ஆனா படத்திற்காக அஜித்தின் பேனருக்கு மாலை போட்டு பாலாபிஷேகம் செய்து பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்.
இதற்கிடையே திடீரென திரையரங்கு வாயில் முன்பு திடீரென ஒரு பேனர் பிடித்து அதில் லைக்காவை காணவில்லை. விடாமுயற்சி டைட்டில் வெளியாகி 300 நாளாச்சு.. படத்தோட அப்டேட் என்ன ஆச்சு? கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என பேனர் பிடித்து தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்தனர். மேலும் திரையரங்கு வாயில் முன்பு நடனம் ஆடி படத்தை வரவேற்று கொண்டாடினர்.