மாநிலக் கல்வி கொள்கை: முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு!
மாநிலக் கல்வி கொள்கை தயாரிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் த. முருகேசன் தலைமையிலான குழு தனது அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தது.
முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் இன்று (1.7.2024) தலைமைச் செயலகத்தில், மாநிலக் கல்வி கொள்கை தயாரிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் த. முருகேசன் தலைமையில் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையினை சமர்ப்பித்தது.
2021-22ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் “தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத் தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை இந்த அரசு அமைக்கும்’’ என அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும்விதமாக, தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை வடிவமைப்பது குறித்து ஆய்வு செய்திட, தில்லி உயர்நீதிமன்ற மேனாள் தலைமை நீதியரசர் த.முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
மாநிலக் கல்வி கொள்கை தயாரிக்க தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட அக்குழு இன்று முதல்வர் ஸ்டாலினிடம் தனது அறிக்கையினை சமர்ப்பித்தது.
இந்நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., குழுவின் உறுப்பினர்கள் - பேராசிரியர் ராம சீனுவாசன், எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில், முனைவர் அருணா ரத்னம், ஜெயஸ்ரீ தாமோதரன், துளசிதாசன், டி.எம்.கிருஷ்ணா, ரா.பாலு, முனைவர் ஃப்ரீடாஞானராணி, பேராசிரியர் பழனி, குழுவின் உறுப்பினர் செயலர் முனைவர் ஏ. கருப்பசாமி, பள்ளிக்கல்வித் துறை செயலாளர் ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் முனைவர் ச. கண்ணப்பன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.