சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தியின் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தியின் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தி வீற்றுள்ள சித்சபை எதிரே உள்ள கொடிமரத்தில், பஞ்சமூர்த்திகள் முன்னிலையில், சுவாமியின் பிரதிநிதியான ஹஸ்தராஜரை முன்னிறுத்தி ஆவாஹணம் செய்து புதன்கிழமை காலை 7.15 மணிக்கு உற்சவ ஆச்சாரியார் சிவ.கு.த.கு, கிருஷ்ணசாமி தீட்சிதர் ரிஷபக் கொடியை ஏற்றி வைத்து உற்சவத்தை தொடங்கிவைத்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏஎஸ்பி பி.ரகுபதி மேற்பார்வையில் நகர காவல் ஆய்வாளர் ரமேஷ்பாபு செய்திருந்தார்.
உத்சவ விபரம் வருமாறு: ஜூலை 4-ஆம் தேதி வெள்ளி சந்திர பிறை வாகன வீதிஉலா, 5-ஆம் தேதி தங்க சூரிய பிறை வாகன வீதிஉலா, 6-ஆம் தேதி வெள்ளி பூதவாகன வீதிஉலா, 7-ஆம் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதிஉலா (தெருவடைச்சான்), 8-ஆம் தேதி வெள்ளி யானை வாகன வீதிஉலா, 9-ஆம் தேதி தங்க கைலாச வாகன வீதிஉலா,
10-ஆம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதிஉலாவும், ஜூலை 11-ஆம் தேதி வியாழக்கிழமை தேர்த்திருவிழா நடைபெறுகிறது. பின்னர் 11-ஆம் தேதி இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. ஜூலை 12-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதி உலா வந்த பின்னர் பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்களின் கமிட்டி செயலாளர் உ.வெங்கடேச தீட்சிதர், துணைச் செயலாளர் து.ந..சுந்தரதாண்டவ தீட்சிதர் மற்றும் பொதுதீட்சிதர்கள் செய்துள்ளனர்.