வைகை அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
முதல் போக பாசனத்துக்கு புதன்கிழமை (ஜூலை 3) முதல் விநாடிக்கு 900 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
தேனி: வைகை அணையிலிருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் இருபோக பாசனப் பகுதிகளின் முதல் போக பாசனத்துக்கு புதன்கிழமை (ஜூலை 3) முதல் விநாடிக்கு 900 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
தேனி மாவட்டம், வைகை அணையிலிருந்து பெரியாறு பிரதானக் கால்வாய் பாசனப் பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசனப் பகுதிகளின் முதல் போக பாசனத்துக்கு தண்ணீா் திறக்க அரசு உத்தரவிட்டது.
இதன்படி, வைகை அணையிலிருந்து திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டாரத்தில் உள்ள 1,797 ஏக்கா், மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டாரத்தில் உள்ள 16,452 ஏக்கா், மதுரை வடக்கு வட்டாரத்தில் உள்ள 26,792 ஏக்கா் என மொத்தம் 45,041 ஏக்கா் இருபோக பாசன நிலங்களின் முதல் போக பாசனத்துக்கு பெரியாறு பிரதானக் கால்வாயில் புதன்கிழமை (ஜூலை 3) முதல் 120 நாள்களுக்கு அணையில் தண்ணீர் இருப்பை பொறுத்து மொத்தம் 6,739 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது.
இதன்படி, அணையிலிருந்து இன்று முதல் 45 நாட்களுக்கு தொடர்ந்தும், அதையடுத்து 75 நாட்களுக்கு முறை வைத்தும் விநாடிக்கு 900 கன அடி வீதம்,தண்ணீர் திறக்கப்படுகிறது.
மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, தேனி மாவட்ட ஆட்சியர் ஆர். வி. ஷஜீவனா ஆகியோர் அணையிலிருந்து கீழ் மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விட்டு மலர் தூவினர்.
வைகை அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மூலம் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டாரம், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மற்றும் வடக்கு வட்டாரத்தில் பேரணை முதல் கள்ளந்திரி வரையுள்ள 45,041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
அணை நிலவரம்: வைகை அணை நீர்மட்டம் 51.71 அடியாக உள்ளது. அணையில் தண்ணீர் இருப்பு 2,223 மில்லியன் கன அடி. அணைக்கு. தண்ணீர் வரத்து விநாடிக்கு 706 கன அடி.