மேட்டூர் அணை நீர்மட்டம் 92.62 அடியாக உயர்வு!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 45,597 கன அடியாக அதிகரித்து நீர்மட்டம் 92.62 அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 45,597 கன அடியாக அதிகரித்து நீர்மட்டம் 92.62 அடியாக உயர்ந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 1 லட்சம் கன அடிக்கு மேல் உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது.
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீரால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. செந்நிறத்தில் நுங்கும் நுரையுமாக பெருக்கெடுத்து வரும் உபரி நீரால் வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 45,598 கன அடியாக அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் வியாழக்கிழமை இரவு 90.50 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 92.62 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 55.69 டி.எம்.சியாக உள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் மேட்டூர் அணைக்கு முழுமையாக வந்து சேர்ந்தால் ஓரிரு நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியாக உயரம் என்று நீர்வளத்துறை வட்டார தகவல்கள் கூறுகின்றன.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு ஒரு லட்சம் கன அடிக்கு மேல் அதிகரிக்கும் என்பதால் அடிப்பாலாறு, செட்டிபட்டி, கோட்டையூர், பண்ணவாடி பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.
செட்டிபட்டி, கோட்டையூர், பண்ணவாடி பரிசல் துறைகளில் பாதுகாப்பு கருதி படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.