பாரீஸ் ஒலிம்பிக்ஸ்: வாள்வீச்சு போட்டியில் அசத்திய 7 மாத கர்ப்பிணி!
வாள்வீச்சு போட்டியில் 7 மாத கர்ப்பிணியான நடா ஹஃபீஸ் அசத்தியுள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக்ஸில் எகிப்திய வாள்வீச்சு வீராங்கனையான நடா ஹஃபீஸ், தான் 7 மாத கர்ப்பிணியாக வாள்வீச்சுப் போட்டியில் பங்கேற்றதாக தெரிவித்துள்ளார்.
எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவைச் சேர்ந்த 26 வயதான நடா ஹஃபீஸ், முன்னாள் தேசிய கல்லூரி தடகள சங்கத்தின் சாம்பியனான அமெரிக்காவின் எலிசபெத் டார்டகோவ்ஸ்கியை தோற்கடித்து அவருக்கு அதிர்ச்சியளித்தார். ஆனால், அடுத்த சுற்றில் தென் கொரியாவின் ஜியோன் ஹயோங்கிடம் தோல்வியைத் தழுவினார்.
இதுகுறித்து எகிப்து நாட்டைச் சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனையான நடா ஹஃபீஸ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “ போட்டிக் களத்தில் இரண்டு பேர் இருப்பதாக உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், உண்மையில் இங்கிருப்பது மூன்று பேர்!. ஆம்..நான், என்னுடைய போட்டியாளர் மற்றும் இன்னும் நம் உலகிற்கு வராத என்னுடைய குழந்தை!
Advertisement
Advertisement
என் குழந்தையும் நானும் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் உள்ள சவால்களில் சம அளவிலான பங்கைக் கொண்டுள்ளோம். கர்ப்ப காலம் ரோலர்கோஸ்டர் போல கடினமானது. ஆனால், வாழ்க்கை, விளையாட்டுகளின் சமநிலையை பராமரிக்க போராடுவது கடினமானது. இருப்பினும் அது மதிப்புக்குரியதாகும்.
16-வது சுற்றில் எனது இடத்தைத் தக்கவைத்தது என்னை பெருமைப்பட வைக்கிறது என்பதைச் சொல்வதற்காக இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.
எனது கணவர் இப்ராஹிம் மற்றும் எனது குடும்பத்தினரின் நம்பிக்கையைப் பகிர்ந்து கொண்டதில் நான் அதிர்ஷ்டசாலி. இந்த ஒலிம்பிக் வேறுபட்டது; நான் மூன்று முறை ஒலிம்பியன். ஆனால், இந்த முறை ஒரு குட்டி ஒலிம்பியனை சுமந்து கொண்டிருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவத்தில் பட்டம் பெற்ற முன்னாள் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான நடா ஹஃபீஸ் தனிநபர் மற்றும் குழு வாள்வீச்சுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற மூன்று முறை ஒலிம்பியன் ஆவார்.
திங்கள்கிழமை (ஜூலை 29) அன்று நடந்த வாள்வீச்சுப் போட்டியில் 16 ஆவது இடத்தைப் பிடித்தார். இது அவரது சிறந்த தரநிலை ஆகும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.