சென்னை: தமிழ்நாடு பாஜகவில் அண்ணாமலை மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் தரப்பினர் இடையே ஏற்பட்டுள்ள மோதல் குறித்து கட்சி மேலிடம் அறிக்கை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்ட தோல்விக்கு அண்ணாமலை செயல்பாடுகளே காரணம் என கட்சி நிர்வாகிகள் புகார்கள் கூறி வந்தனர்.
இதனிடையே அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் பல இடங்களில் வெற்றி பெற்றிருக்கலாம் எனவும், குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்களுக்கு அண்ணாமலை பாஜகவில் பதவி வழங்கியதையும் தமிழிசை விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில், தமிழ்நாடு பாஜகவில் அண்ணாமலை, தமிழிசை ஆதரவாளர்கள் இடையே மோதல் நீடிப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வைரலானது.
இதையடுத்து அண்ணாமலையின் செயல்பாடுகள் மற்றும் மற்ற நிர்வாகிகளுடன் அவர் ஒருங்கிணைந்து செயல்படுவதும் குறித்தும், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஏற்பட்ட தோல்விக்கான காரணங்கள் குறித்து கட்சி மேலிடம் அறிக்கை கேட்டுள்ளது.
பாஜக நிலைக்குழு உறுப்பினரான பொன். ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் ஆகியோரிடம் மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் அறிக்கை கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்சி நிர்வாகிகள் பலர் தான் சொல்வதை கேட்பதில்லை எனவும், கட்சியின் முழு கட்டுப்பாட்டை தனக்கு அளித்தால் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெறலாம் என மேலிடத்தில் அண்ணாமலை தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக உடனான கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் காரணம் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்தலுக்கு முன்னரே அறிக்கை கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.