பேராவூரணி: குவைத் தீ விபத்தில் பலியான தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை சேர்ந்த இளைஞர் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு வெள்ளிக்கிழமை நள்ளிரவில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது பெற்றோர்கள் கதறி அழுதது பார்ப்போரின் நெஞ்சங்களை உருக்கியது.
பேராவூரணி அருகே உள்ள ஆதனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த மனோகரன் (60) இவரது மனைவி லதா (48). இவர்களுக்கு புனாப் ரிச்சர்ட் ராய் (28)ரூஸோ (25 )என்ற இரு மகன்கள் இதில் முதல் மகன் ரிச்சர்ட் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் குவைத் நாட்டில் மங்காஃப் என்ற இடத்தில் என்.பி.டி.சி என்ற கட்டுமான நிறுவனத்தில் தரக்கட்டுப்பாடு ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
கடந்த பிப்ரவரி மாதம் தனது வீடு கிரகப்பிரவேசத்திற்காக சொந்த ஊருக்கு வந்தவர் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் குவைத் நாட்டிற்கு சென்றார் .
இந்த நிலையில், கடந்த 12 ஆம் தேதி குவைத்தின் மெங்காஃப் பகுதியில் உள்ள ஓா் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய சுமாா் 200 போ் வசித்து வந்த குடியிருப்பின் 6-ஆவது மாடியில் உள்ள வீட்டின் சமையலறையில் திடீரென தீப்பிடித்தது. இதனால் பெரும்புகை ஏற்பட்டு குடியிருப்பின் பிற பகுதிகளுக்கும் புகை பரவியது.இதில் சிக்கிக் கொண்ட 150-க்கும் மேற்பட்டோரில் 49 போ் உயிரிழந்தனா். அவா்களில் 42 போ் இந்தியா்கள், இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேரில் பேராவூரணியை சேர்ந்த புனாப் ரிச்சர்ட் ராயும் உயிரிழந்தார்.
இதையடுத்து இறந்தவர்களின் உடல்களை மீட்டுத் தருமாறு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து தமிழக வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மூலம் நடவடிக்கை மோற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் உடல்கள் தனி விமான மூலம் கேரளம் மாநிலம் கொச்சினுக்கு வெள்ளிக்கிழமை காலை கொண்டு வரப்பட்டு அரசு ஆம்புலன்ஸ் மூலம் நள்ளிரவு 12.10 மணிக்கு புனாப் ரிச்சர்ட் ராய் உடல் ஆதனூரில் அவரது வீட்டில் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சவப் பெட்டியில் வைத்து அடைக்கப்பட்டிருந்த புனாப் ரிச்சர்ட் ராய் உடலை அவரது தந்தை மற்றும் தாய் பெட்டியை திறக்க வேண்டாம் எங்கள் மகனின் இறந்த நிலையை பார்க்கும் தைரியம் எங்களுக்கு இல்லை என கதறி அழுதது பார்ப்போரின் நெஞ்சங்களை உருகச் செய்தது.
உடலுக்கு தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ, காவல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர் .
வீட்டிலிருந்து சவப்பெட்டி திறக்கப்படாமலேயே ஆதனூர் ஆர்.சி சர்ச் எடுத்து செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெற்று கல்லறை தோட்டத்தில் இரவு 1 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது.
தமிழக அரசு அறிவித்த நிவாரண தொகை ரூ.5 லட்சத்திற்கான காசோலையை புனாப் ரிச்சட் ராயின் தந்தை ஆனந்த மனோகரிடம் ஆட்சியர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.
உடலை விரைந்து மீட்டுக் கொடுத்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான்,பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் என்.அசோக்குமார் ஆகியோருக்கு கண்ணீர் மல்க குடும்பத்தினர்களும் உறவினர்களும் நன்றி தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.