சென்னை: தமிழ்நாடு பேரவையில் அமளியில் ஈடுபட்டதால் பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அதிமுக உறுப்பினர்களை மீண்டும் அவைக்குள் அனுமதிக்க வேண்டும் என பேரவைத் தலைவர் அப்பாவுவிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் வைத்தார். முதல்வரின் பெருந்தன்மையை சுட்டிக்காட்டி அதிமுகவினர் அவைக்கு வருவதற்கு பேரவைத் தலைவர் அனுமதி அளித்தார்.
பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், குறுக்கிடுவதற்கு பேரவைத் தலைவர் மன்னிக்கவும். டிசம்பர் 2001- இல் இதுபோன்று ஒரு நிகழ்வு கடலூர் மாவட்டம், பண்ருட்டி பகுதியில் நடைபெற்று, 52 நபர்கள் மரணமுற்று, 200-க்கும் மேற்பட்டோர் மிகுந்த பாதிப்புக்குள்ளானார்கள். அப்போது உரிய நடவடிக்கை சரிவர எடுக்கப்படவில்லை என்று எல்லோரும் கருத்துத் தெரிவித்திருந்தனர். நம்முடைய பாமகட்சித்
தலைவர் ஜி.கே. மணி, தி.வேல்முருகன் அவையிலேயே இதுகுறித்து மார்ச் 2002 ஆம் ஆண்டு உரையாற்றியிருக்கிறார்கள்.
தற்போது இந்தச் சம்பவம் குறித்து என்னுடைய கவனத்திற்கு வந்தவுடனேயே நான் தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். அதுகுறித்து நான் அனைத்து உறுப்பினர்களும் பேசிய பின்னர் விரிவாகப் பதில் வழங்குகிறேன். அப்போது சரிவர நடவடிக்கை எடுக்கப்படவில்லை; தற்போது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள காரணத்தால், இப்போது பேசுகிற உறுப்பினர்கள் அந்த நிகழ்வு குறித்து பேசுவார்களோ என பயந்துதான் இவர்கள் இன்றைக்குத் திட்டமிட்டு ஒரு நாடகத்தை அரங்கேற்றிவிட்டு, விதிகளுக்குப் புறம்பாக நடந்துகொண்டு, மரபுகளுக்கு மாறாக குழப்பம் விளைவிக்க முயன்று வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.
ஜனநாயக முறையில் இந்த மாமன்றம் நடைபெறவேண்டும் என்பதில், தலைவர் கலைஞர், நானும் அசையாத கொள்கை உறுதி கொண்டவர்கள்.
மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திலே பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்பதில் கொள்கை உறுதி கொண்டவன் இந்த முதல்வர்.
தாங்களும் பல கோரிக்கைகள் வைத்து, பேரவை முன்னவர் பேசுவதற்கு வாய்ப்பு தரலாம் என பரிந்துரை செய்தும் முதல்வராக,அமைச்சர்களாக இருந்தவர்கள் இங்கே நடந்துகொண்ட முறை தவிர்த்திருக்கப்பட வேண்டியதுதான்.
பேரவை விதி 120-ன்கீழ் பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளீர்கள். அதில் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. எனினும் என்னுடைய வேண்டுகோளாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். இன்றைக்குக் காலையிலும், மாலையிலும் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ள நிலையில், வெளியேற்றப்பட்டவர்கள் இந்த அவைக்கு வினாக்கள் விடைகள் நேரம் முடிந்த பின்னரே அனுமதிக்கப் பெறலாம் என்னும் வேண்டுகோளையும், பிரதான எதிர்க்கட்சி தன்னுடைய கருத்தினைப் பதிவு செய்ய வாய்ப்பு தர வேண்டும் என்றும், இதனை
தாங்கள் பரிசீலித்து ஆவன செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து முதல்வரின் பெருந்தன்மையை சுட்டிக்காட்டி அதிமுகவினர் அவைக்கு வருவதற்கு பேரவைத் தலைவர் அப்பாவு அனுமதி அளித்தார்.
அதிமுக புறக்கணிப்பு
மானியக் கோரிக்கையில் பங்கேற்குமாறு பேரவைத் தலைவர் விடுத்த அழைப்பை அதிமுக நிராகரித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.