முகப்பு
தற்போதைய செய்திகள்

தாயைப் பிரிந்த யானைக் குட்டி தெப்பக்காடு முகாமில் உயிரிழப்பு

கோவை மாவட்டம் மருதமலை வனச் சரகத்தில் தாயைப் பிரிந்த குட்டி யானை குட்டி, உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

Updated On : 29 ஜூன், 2024 at 8:43 AM
தெப்பக்காடு முகாமில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்த தாயைப் பிரிந்த 3 மாத யானைக் குட்டி.
பகிர்:

கோவை மாவட்டம் மருதமலை வனச் சரகத்தில் தாயைப் பிரிந்த குட்டி யானை குட்டி, உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

கோவை மருதமலை வனச் சரகத்தில் கடந்த மே மாதம் 30 ஆம் தேதி 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை உடல் நலம் பாதிக்கப்பட்டு படுத்து கிடந்தது. இதனை வனத் துறையினர் ஐந்து நாட்கள் சிகிச்சை அளித்து வனபகுதிக்குள் விடுவித்தனர்.

இந்தநிலையில், தாயுடன் இருந்த 3 மாத யானைக் குட்டி தாயிடம் இருந்து பிரிந்து வேறொரு யானைக் கூட்டத்துடன் சேர்ந்து காட்டுக்குள் சென்றது.

Advertisement

இதனிடையே மீண்டும் கூட்டத்தை விட்டு பிரிந்து தனியாக யானைக் குட்டி சுற்றி திரிந்தது. இதனைத் தொடர்ந்து வனத் துறையினர் யானைக் குட்டியை மீட்டு தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வனத் துறையின் முயற்சி தோல்வி அடைந்ததால் கடந்த ஜூன் 9 ஆம் தேதி உதகை முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காடு வளா்ப்பு யானைகள் முகாமிற்கு யானைக் குட்டியை கொண்டு சென்று பராமரித்து வந்தனர்.

இந்தநிலையில், யானைக் குட்டிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு 8.45 மணியளவில் உயிரிழந்ததாக வனத் துறையினர் தெரிவித்தனர்.

இதையடுத்து சனிக்கிழமை காலை உடல்கூறாய்வு செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

யானைக் குட்டி உயிரிழப்பு

தாயைப் பிரிந்து இருந்த 3 மாத யானைக் குட்டியை முகாமில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், திடீரென உயிரிழந்த சம்பவம் வன ஆர்வலர்களிடைய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.