'இந்தியா' கூட்டணி 300 இடங்களில் வெற்றி பெறும்: டிகே சிவகுமார்
மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி 300 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும்
லக்னௌ: மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி 300 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்றும் பாஜக அதிகபட்சமாக 200 இடங்களில் மட்டும் வெற்றி பெறும் என்றும் கர்நாடக காங்கிரஸ் கட்சித் தலைவரும் துணை முதல்வருமான டி.கே.சிவக்குமார் கூறினார்.
உத்தரபிரதேச மாநிலம் லக்னௌவில் நடைபெற்ற செய்தியாளர்களிடம் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பேசுகையில், 'இந்தியா' கூட்டணி 300 இடங்களில் வெற்றி பெறும். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 200 இடங்களில் மட்டும் வெற்றி பெறும். நாங்கள் தேர்தலில் வெற்றி பெறுவோம், நாங்கள் ஒன்றாக விவாதித்து ஆட்சி அமைப்போம் என்று சிவகுமார் கூறினார்.
மேலும், "முன்னதாக, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்தபோது, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சோனியா காந்தியை நாட்டின் பிரதமராக விரும்பினர். நாங்கள் நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாமிடம் கடிடிதம் கொடுத்தோம். ஆனால் நாட்டைக் காப்பாற்ற ஒரு சீக்கியரும் பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங் பிரதமராக வேண்டும் சோனியா முடிவு செய்தார்.
மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்த பிறகு பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. ஆனால், அவை எதுவுமே நிறைவேற்றப்படவில்லை.
பாஜக வாக்குறுதியளித்தபடி மீட்கப்பட்ட கறுப்புப் பணம் எங்கே? விவசாயிகளின் வருமானம் ஏன் இரட்டிப்பாகவில்லை? இளைஞர்களுக்கு ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகள் எங்கே? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய டி.கே.சிவகுமார், இவற்றுக்கெல்லாம் பாஜக தலைவர்கள் பதிலளிப்பார்களா? என்றார்.
கர்நாடகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற முதல் நாளே மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் 5 வாக்குறுதிகளை அறிமுகப்படுத்தி அதனை செயல்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது. எனவே மக்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர்களை பார்த்து வாக்களிக்க வேண்டும். பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கை முறியடிக்க வேண்டும்.
நாடு முழுவதும் மக்கள் காங்கிரஸ் கட்சியை ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி அழைத்துச் செல்கிறார்கள் என்று சிவகுமார் கூறினார்.