தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு சில கட்டுப்பாடுகளுடன் வெள்ளிக்கிழமை மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருந்த சில மணி நேரங்களில், மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்திற்கு வானிலை மையத்தின் கனமழை எச்சரிக்கை இல்லாததால், குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கான தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனையடுத்து, ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி ஆகிய அருவிகளில் நீராடுவதற்கான தடை உடனடியாக விலக்கி கொள்ளப்படுவதாகவும், பேரருவியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவா். பழைய குற்றாலம் அருவியில் தினமும் காலை 6 முதல் மாலை 5.30 மணி வரை குளிக்க அனுமதிக்கப்படுவா் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது.
மேலும் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கான அனுமதியானது, சென்னை வானிலை மைய அறிவிப்பு மற்றும் கனமழை ஆகியவற்றைப் பொருத்து அவ்வப்போது மாறுதல் செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், 7 நாள்களுக்கு பின் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் அருவிகளில் ஆர்வத்துடன் குளித்து வந்தனர்.
இந்த நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலையில் மீண்டும் மழை பெய்து வருவதால் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிப்பதற்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.