எடியூரப்பா மீது போக்சோ வழக்கில் புகாரளித்த பெண் உயிரிழப்பு!
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ வழக்கில் புகாரளித்த பெண் திடீரென உயிரிழந்தார்.
கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜகவின் நாடாளுமன்றக் குழு உறுப்பினருமான பி.எஸ்.எடியூரப்பா, தனது 17 வயது மகளை பாலியல் வன்புணர்வு செய்ததாக போக்சோ வழக்குத் தொடுத்த பெண் இன்று மருத்துவமனையில் உயிரிழந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு, பெண் ஒருவர் ஒரு மோசடி வழக்குத் தொடர்பாக உதவி கேட்க எடியூரப்பாவைச் சந்தித்த போது அவர் தனது 17 வயது மகளை பாலியல் வன்புணர்வு செய்ததாக பெங்களூரு சதாசிவ நகர் காவல்நிலையத்தில் புகாரளித்திருந்தார்.
17 வயது சிறுமியின் தாயார் அளித்த பாலியல் வன்கொடுமை புகாரின் பேரில் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பெங்களூரு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த வழக்கு தேர்தல் நேரத்தில் தனது பெயரைக் களங்கப்படுத்தப் போடப்பட்டதாக எடியூரப்பா மறுப்பு தெரிவித்திருந்தார். பின்னர் இந்த வழக்கின் விசாரணை சிஐடிக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில், புகாரளித்த பெண் இன்று உயிரிழந்தார். அந்த பெண் கடந்த சில ஆண்டுகளாக நுரையீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
பன்னர்கட்டா சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முன்னரே சிகிச்சை பெற்று வந்த அவருக்கு திடீரென்று சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளது. எனவே, ஹுளிமாவு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.