தோல் தொழிற்சாலை டெக்னீசியன் தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்பு
வாணியம்பாடியில் தனியார் தோல் தொழிற்சாலை தண்ணீர் தொட்டியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த தொழிற்சாலை டெக்னீசியன் சடலமாக மீட்கப்பட்டார்.
வாணியம்பாடியில் தனியார் தோல் தொழிற்சாலை தண்ணீர் தொட்டியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த தொழிற்சாலை டெக்னீசியன் சடலமாக மீட்கப்பட்டார்.
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா ? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம், புதுமனை பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (47). இவர் வாணியம்பாடி கச்சேரி சாலை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தோல் தொழிற்சாலையில் கடந்த 9 ஆண்டுகளாக டெக்னிசியனாக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், தீபாவளி விடுமுறையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் இரண்டு நாள்கள் ஆகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் உறவினர் மற்றும் நண்பர் வீடுகள் என பல இடங்களில் தேடி வந்த நிலையில், வினோத்குமார் தான் பணிபுரிந்து வந்த தொழிற்சாலைக்கு எதிரில் உள்ள மற்றொரு தனியார் தோல் தொழிற்சாலை பின்புறம் உள்ள சுமார் 7 அடி ஆழமுள்ள மழைநீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
இதனை அறிந்த அவரது உறவினர்கள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி தொழிற்சாலை முன்பு கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிக்க |தீபாவளி: இரு நாள்களில் ரூ.438 கோடிக்கு மது விற்பனை!
தகவல் அறிந்து வந்த வாணியம்பாடி நகர போலீசார் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
மேலும் தனியார் தோல் தொழிற்சாலையில் அமைக்கப்பட்டுள்ள மழை நீர் தொட்டி மூடாமல் திறந்த வெளியில் இருந்ததால் தவறி விழுந்து உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.