முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் மறைவு: அமைச்சர் செந்தில்பாலாஜி அஞ்சலி
மறைந்த முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் உடலுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
கோவை: மறைந்த முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் (66), திருப்பதியில் மாரடைப்பால் வெள்ளிக்கிழமை காலமானார். அவரது உடலுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
அப்போதைய கோவை மேற்கு தொகுதியில் 1991 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கே.செல்வராஜ். காங்கிரஸ் கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏவாக ஜெயலலிதா அணியில் சட்டப்பேரவையில் செயல்பட்டு வந்தார்.
2006 இல் காங்கிரஸ் சேவா தளத்தின் தலைவராக இருந்துவந்த செல்வராஜ். 2015 இல் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அதிமுகவில் இணைந்த கோவை செல்வராஜ், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்தார்.
கடந்த 2022 ஆம் ஆண்டில் அதிமுகவில் இருந்து விலகி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்து, செய்தித் தொடர்பு துணைச் செயலராக பொறுப்பு வகித்து வந்தார்.
இதையும் படிக்க | மக்களை மதரீதியாக துண்டாட பாஜக தீவிரம்: ராகுல் குற்றச்சாட்டு
இந்த நிலையில், தனது மகனின் திருமணத்துக்காக திருப்பதிக்கு சென்ற அவர், அங்கு மாரடைப்பால் காலமானார். இவரது உடல் சனிக்கிழமை கோவை லாலி சாலையில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவரது உடலுக்கு தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அவருடன், திமுக சொத்து பாதுகாப்பு குழு துணைத்தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், வடக்கு மாவட்ட செயலாளர் தொ அ.ரவி, தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், பகுதி கழக செயலாளர் கார்த்திக் செல்வராஜ், மாமன்ற உறுப்பினர் சோமு சந்தோஷ், டவுன் ஆனந்த் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.
கோவை செல்வராஜ் மறைவிற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே இரங்கல் தெரிவித்துள்ளார்.
மறைந்த கோவை செல்வராஜ் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.