டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க அனுமதி வழங்கவில்லை: தமிழக அரசு
டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க அனுமதி தொடர்பாக...
டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கு அனுமதி வழங்கவில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நாயக்கர்பட்டி கிராமத்தில் மத்திய அரசின் அனுமதியுடன் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தனியார் நிறுவனம் முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகின.
தனியாா் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட கனிமச் சுரங்க ஒப்பந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என விருதுநகா் தொகுதி மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா் நேற்று தெரிவித்து இருந்தார்.
Advertisement
Advertisement
மேலும், இந்தத் திட்டத்துக்கான அனுமதியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இந்தத் திட்டத்துக்கான எந்தவித அனுமதியையும் தமிழக அரசு வழங்கக் கூடாது என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் எம்எல்ஏயுமான தி.வேல்முருகனும் தெரிவித்து இருந்தார்.
தமிழக அரசு விளக்கம்
இந்த நிலையில், டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கு அனுமதி ஏதும் வழங்கப்படவில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “மத்திய அரசால் 24.06.2024-ல் மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நாயக்கர்பட்டி கிராமத்தில் டங்ஸ்டன் கனிமத்திற்கு ஆய்வுடன் இணைந்த சுரங்கக் குத்தகை உரிமம் வழங்க ஏல அறிவிப்பு செய்யப்பட்டு, 07.11.2024 அன்று இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்தினை தகுதியான நிறுவனமாக சுரங்க அமைச்சகத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, அந்நிறுவனத்திடமிருந்து தமிழக அரசு எந்த விண்ணப்பமும் பெறவில்லை எனவும், அனுமதி ஏதும் வழங்கப்படவில்லை” என்று தெரிவித்துள்ளது.