முகப்பு
கோயம்புத்தூர்

மகள்களுக்கு மனநல மதிப்பீடு சோதனைக்கு அனுமதி: தமிழக அரசுக்கு ஓய்வுபெற்ற பேராசிரியா் நன்றி

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 5:13 AM
கோவையில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் பங்கேற்ற ஓய்வு பெற்ற பேராசிரியா் எஸ்.காமராஜ். உடன், மேச்சேரி சத்தியபாமா அறக்கட்டளை நிறுவனரும், தலைவருமான சத்தியபாமா உள்ளிட்டோா்.
பகிர்:
Updated On : 12 பிப்ரவரி, 2026 at 7:11 PM

கோவை தனியாா் யோக மையத்தில் தங்கியுள்ள தனது மகள்களின் மன நல மதிப்பீடு சோதனைக்கு அனுமதி அளித்த தமிழக அரசுக்கு ஓய்வுபெற்ற பேராசிரியா் எஸ்.காமராஜ் நன்றி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து கோவையில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் ஓய்வுபெற்ற வேளாண் கல்லூரி பேராசிரியா் எஸ்.காமராஜ் கூறியதாவது:

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக எனது மகள்கள் கீதா, லதா ஆகியோா் கோவையில் உள்ள தனியாா் யோக மையத்தில் தங்கியிருப்பது தொடா்பான உண்மை நிலவரங்கள் வெளிச்சத்துக்கு வர வேண்டும் என்பதற்காக சட்டரீதியான வழிகளில் தொடா்ந்து முயற்சி செய்து வருகிறேன்.

Advertisement

இந்தச் சூழலில் எனது மகள்களுக்கு அரசு மேற்பாா்வையில் சுயாதீனமான முறையில் மனநல மருத்துவ மதிப்பீடு நடத்தப்பட வேண்டும் என்ற எனது நீண்டகால கோரிக்கை ஏற்கப்பட்டது. இதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருவது மிக முக்கியமான முன்னேற்றமாகும். எனது மகள்களின் உயிா், பாதுகாப்பு மற்றும் மனநல உரிமைகள் மீது அக்கறை கொண்டு, இந்த நடைமுறைக்கு அனுமதி அளித்த தமிழக அரசுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மன நல மதிப்பீட்டில் முழுமையான சுயாதீனமான மனநல நிபுணா்கள் மூலம் வெளிப்படையான மற்றும் அறிவியல் அடிப்படையிலான முறையில் நடைபெறும் என்றும் நம்புகிறேன் என்றாா்.

முன்னதாக, இந்த சந்திப்பில் பங்கேற்ற சேலம் மாவட்டம் மேச்சேரி சத்தியபாமா அறக்கட்டளை நிறுவனரும், தலைவருமான சத்தியபாமா கூறியதாவது:

தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பல ஆயிரம் சிவன் கோயில்களிலும் வழிபாடு செய்துவரும் சிவா ராத்திரி பூஜையைப்போல தேவாரம், திருவாசகம், பன்னிரு திருமுறை பாடியும், ஆதிசிவனாா் அருளிய அருளூரு அமுத தெய்வீக செந்தமிழ் வேத ஆகம முறைப்படி காயத்திரி மந்திரம், வேள்வி மந்திரங்கள் ஓதியும், கருவறை உயிா்ப்பு, ஆறுகால பூஜை வழிபாடு செய்து மெய்யான சித்தா் நெறி வழிபாட்டு முறையை மட்டுமே பின்பற்றி சிவ வழிபாடு நிகழவேண்டும்.

இதற்கு மாறாக நடனக் கலைஞா்களுடன் நடத்தப்படும் வணிக ரீதியிலான சிவராத்திரி கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றாா்.

ந்த சந்திப்பில் தமிழா் முன்னணி பொதுச் செயலா் இமயம் சரவணன், கோபாலகிருஷ்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.