முகப்பு
தற்போதைய செய்திகள்

சம்பல் கலவரத்தன்று நான் ஊரில் இல்லை: சமாஜவாதி எம்பி

உ.பி. சம்பல் கலவரம் தொடர்பாக எம்பி ஜியா-உர்-ரஹ்மான்...

Updated On : 25 நவம்பர், 2024 at 12:36 PM
பாதுகாப்புப் பணியில் காவல் துறையினர்
பகிர்:

சம்பல் கலவரத்தன்று நான் ஊரில் இல்லை என்று சம்பல் சமாஜவாதி எம்.பி. ஜியா-உர்-ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தில் உள்ள ஜாமா மசூதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2-ஆம் கட்ட ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற சம்பவத்தில் வன்முறையை தூண்டியதாக முதல் தகவல் அறிக்கையில் எம்பி ஜியா-உர்-ரஹ்மான் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சமாஜவாதி எம்.பி. ஜியா-உர்-ரஹ்மான் அவர் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார். சம்பவத்தன்று அவர் வெளியூரில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சம்பல் மக்களவைத் தொகுதி சமாஜவாத எம்.பி. ஜியா-உர்-ரஹ்மான் ஏஎன்ஐ செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

நேற்று உ.பி.யிலும் இல்லை, சம்பலிலும் இல்லை. நான் ஒரு கூட்டத்தில் பங்கேற்பதற்காக பெங்களூரு சென்றிருந்தேன். ஆனால், என் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இது காவல் துறையினரின் திட்டமிட்ட சதி. இந்த சம்பவம் உத்தரப் பிரதேசம் மற்றும் இந்தியாவின் நற்பெயரையும் கெடுத்துள்ளது.

திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த சதியில் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்பாவி மக்கள் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; பலர் காயமடைந்துள்ளனர். என் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, அவர்களை சிறையில் அடைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

சம்பல் வன்முறை தொடர்பாக சமாஜவாதி கட்சியின் எம்பி ஜியா-உர்-ரஹ்மான் மற்றும் சமாஜவாதி எம்எல்ஏ இக்பால் மெஹ்மூத்தின் மகன் சோஹைல் இக்பால் உள்ளிட்டோர் மீது 7 முதல் தகவல் அறிக்கைகளை( எஃப்.ஐ.ஆர்கள்) காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர்.

சம்பல் மாவட்டத்துக்குள் கட்சித் தலைவர்கள் உள்பட வெளி ஆள்கள் நுழைவதற்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.