சென்னையில் நாளைமுதல் தீவிரமடையும் மழை!
சென்னை புறநகரில் நாளைமுதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் நாளைமுதல்(நவ. 29) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் நிலவும் புயல் சின்னம் தமிழக கடற்கரையை நோக்கிய நகர்ந்து வருவதால், நவ.28, 29 ஆகிய தேதிகளில் சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்களுக்கு கனமழைக்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறாமல் இருப்பதற்கு அதன் நகர்வில் ஏற்பட்ட தாமதமே காரணம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இதையும் படிக்க: தமிழகத்தை நோக்கி நகா்கிறது புயல் சின்னம்
இந்த நிலையில், வானிலை நிலவரங்களை தன்னுடைய சமூக வலைதளப் பதிவின் மூலம் வெளியிடும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருப்பதாவது:
டெல்டா முதல் சென்னை வரை இன்று(நவ. 28) பகல் மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழை பெய்யும். பகலில் குளுமையான சூழலை அனுபவியுங்கள்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை(நவ. 29) மற்றும் நாளைமறுநாள்(நவ.30) பலத்த மழை பெய்யும்.
டிச.1 மற்றும் டிச. 2 ஆகிய தேதிகளில் முழுமையான மழையை பெறலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.