சித்த மருத்துவர்கள் அலோபதி மருத்துவம் செய்யத் தடையில்லை! - உயர்நீதிமன்றம்
சித்த மருத்துவர்கள் அலோபதி மருத்துவம் செய்யத் தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம்.
சித்த மருத்துவர்கள் அலோபதி மருத்துவம் செய்யத் தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னையில் சித்த மருத்துவர் எஸ்.சிந்து என்பவர் தனது மருத்துவமனையில் அலோபதி மருந்துகளை பதுக்கி வைத்திருந்ததாக, ஆய்வு செய்ய வந்த மருந்து கட்டுப்பாட்டு அலுவலக அதிகாரி புகார் தெரிவித்து 2017ல் அவர் மீது வழக்கும் பதிவு செய்தார்.
இதனை எதிர்த்து, தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி, மருத்துவர் சிந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அதன்படி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
அப்போது, சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி போன்ற இந்திய மருத்துவம் படித்தவர்கள், அலோபதி மருந்துகளை பரிந்துரைக்கலாம் என தமிழக அரசு கடந்த 2010ல் அனுமதி அளித்த அரசாணையை சுட்டிக்காட்டினார்.
அதேநேரத்தில் அளவுக்கு அதிகமாக அலோபதி மருந்துகளை வைத்திருக்க முடியாது எனவும் தெரிவித்து, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவையும் சுட்டிக்காட்டினார்.
ஆனால், சித்த மருத்துவர் சிந்து உரிமம் இன்றி அலோபதி மருந்துகளை வைத்திருந்ததால் அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். அவர் அலோபதி சிகிச்சை வழங்க தடையில்லை, ஆனால், உரிமம் இன்றி மருந்துகளை வைத்திருந்ததால் நோட்டீஸ் அனுப்பப்படுவதாகவும் விளக்கம் தெரிவித்தார்.
அதனால் அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், இந்த வழக்கை விரைந்து முடிக்க 10-வது பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார்.